Saturday 4 July 2015


 PACM அன்பு நண்பர்கள்

 
 
 
 
                                                                  கடந்த மாசி( feb2015) மாதத்தில் ஒரு நாள் எங்கள் ஊர் அம்பலபுளி பஜாரில் நண்பர் ஒருவரை பார்க்க நின்று கொண்டிருந்தேன்.. பின்னாலிருந்து டேய் என்று யாரோ தொட்டு கூப்பிட்டதும் யார்ரா அவன் பெரிய மனுசன அடா  புடான்னு கூப்பிடுறவன் ( நான் தான் பெரிய மனுஷன்.......ஹி ஹி) என்று திரும்பி பார்த்தால் என் சக வகுப்புத் தோழன் ரமேஷ்.
 
டேய் ரமேஷ்.....நல்லா இருக்கியா?உன்ன பாத்து  எத்தனை வருசமாச்சு?

நல்ல இருக்கேன் டா... என்ன இங்க நின்னுகிட்டு இருக்க?

பிரண்ட பாக்க வந்தேன்..அதான். இங்க தான் அந்த கடைக்கு மேல..

எங்க இருக்க? என்ன பண்ற?

நான் இந்தொநேசியால இருக்கேன்... டெக்ஸ்டைல்ஸ். அத விட்டா வேற எதுவும் தெரியாது..... நீ?

நான் மும்பைல எல் ன் டி ல இருக்கேன். என் மகளுக்கு காத்து குத்து, அதான் அப்படியே  வந்து ஒரு வாரம் இருந்துட்டு போகலாம்னு....
 
சூப்பர்.. எத்தனை பசங்க?  
 
பொண்ணு ஒன்னு பையன் ஒன்னு..... உனக்கு?

எனக்கு முதல்ல மகன்... 7 வயசாகுது... இப்ப டார்லிங் பிறந்திருக்கா..8 மாசமாச்சு.!
 
ரொம்ப சந்தோசம் டா.. உன்னை பாத்ததுல.. ரொம்ப வருசமாச்சா? ஒரு சந்தேகத்தோட தான்  கூப்பிட்டேன். ஜீவா மாதிரி இருக்கேன்னு.
 
ஹ ஹ .......நீ தான் ரமேஷ் அப்படியே இருக்க.  ஆமா...... ஜீவராஜமணிகண்டன், ஏதாவது காண்டாக்ட் இருக்கா? வேற யாராவது இன்னும் தொடர்புல இருக்காங்களா?

என்னடா இப்படி  கேக்குற? அவன் போலிஸ் ஆகிட்டான்ல அவங்க அப்பா மாதிரி? நீ வாட்சப் க்ரூப்ல இல்லியா?

எது க்ருபா? உன்னை தான் நம்ம செட்ல இதனை வருஷம் கழிச்சு பாக்குறேன். விக்னி, டேவி, குரு இவங்கள மட்டும் எங்கயாவது பாத்தா தலை அசைச்சுட்டு போறதோட சரி. டேவி மகனும் என் மகனும் ஒரே வகுப்பு தான். அதானல அப்பப்ப ஹாய் சொல்லிக்குவோம்.  குருநமச்சிவாயம் அடிக்கடி பேசுறதுண்டு.
 
நண்பர்கள் சிலர்...நானும் வாட்சப் க்ரூப்ல இருக்கேன்னு சொல்லிகிட்டு அதுல என்ன பேசுறாங்க, உருப்படியான விஷயங்கள் பேசுறாங்களா? வெறும் அரட்டை மட்டுமா? என்ன நடக்குதுன்னு கூட பாக்காம, ஒரு வணக்கம் கூட சொல்லாம தினமும் காலையிலிருந்து இரவு வரை எத்தனை செய்திகள் வந்துச்சுன்னு கணக்கு பாத்துட்டு கிளியர் சாட் பண்றவங்கள பாத்துருக்கேன்..ரமேஷ். டெக்னாலஜி வளந்தத ஒரு பக்கம் திட்டுறோம் அதே தான் நம்மள சேத்தும் வைக்குது. கொடுமை என்னன்னா எனக்கு இத்தனை செய்திகள் வருது, ஆனா நான் படிக்கிறதில்ல அப்படிய அழிச்சிடுவேன்னு சொல்லி பெரும வேற பட்டுகிறாங்க.
 
நீ சும்மா இரு டா ஜீவா. இந்த சங்கம் அப்படி இல்ல. நீ வந்து பாரு உனக்கு தெரியும். உன் நம்பர குடு..இன்னைக்கே சேத்து விட்டுடுறேன். ரெண்டு குரூப் இருக்கு. அதுல ஒன்னு..............

அதுல ஒன்னு........... ?என்ன பிரச்சினை?

 ஒண்ணுமில்ல. ரெண்டுலயும் சேத்து விடுறேன். கிட்டத்தட்ட எல்லாருமே இருக்காங்க. நம்ம கூட படிக்க பொண்ணுங்க தவிர.
 
ரைட்டு...புடி நம்பர..

சீக்கிரம் சேத்து விடு...எனக்கும் பொறுமைக்கும் ஒவ்வாமை. என்ன ஒரே ஒரு தயக்கம்.. என்னை யாருனே தெரியாதுன்னு சொல்லிட்டாங்கன்ன?

நீ சும்மா இரு டா? அவங்கள பத்தி உனக்கு தெரியாது. வா வந்து பாரு தெரியும்.

அப்ப சரி..பாக்கலாம்.
 
அடுத்த 15 நிமிடங்களில் அந்த சங்கத்தில் நான்.
 

                                               சங்கத்தின் பெயர்   PACM Friends.


Hi Friends
 
Welcome to group Jeeva
 
Welcome Jeeva
 
Welcome Jeeva ( who is this?எதுக்கும் சொல்லி வைப்போம்)
 
வருக வருக ஜீவா
 
thanks ( சொல்லும் போதே தமிழ்ல சொல்றாங்க.....ஆகா. என்று வியந்தேன்)
 
சிறிது நேரம் கழித்து ஜீவராஜமணிகண்டன் வந்து "வாடா என் பேர் வச்சவனே ! நல்லாயிருக்கியா?"
 
I am fine Jeeva. how r u?
 
நல்லாயிருகேன். உன்னை எல்லாரும் ஜீவானு கூபிடுரானு வ? அப்பா நான் யாரு? போலிஸ்னு ஒரு பயமில்லியா டா?
 
I don't mind. but.....Guys shall we call him as JRM?
 
Ok..ok ok.. don't get confused. we will call Police as JRM.
 
அங்க தான் ஆரம்பிச்சது வினை. இரண்டு மூன்று நாட்கள் பொறுத்து பொறுத்து பார்த்த ஜீவா கடுங்கோபமாகி "டேய் அவன என்ன பேர் சொல்லி வேணா கூப்பிடுங்க எனக்கு என் பெயர் சொல்லி கூப்பிடுங்க. அவ்வளவு தான் சொல்லிட்டேன்." என்றதும்....எனக்கு என் அம்மா வைத்த பெயரை இனிமேல் இவர்களு கூப்பிடட்டும் என்று சொல்ல
 
 எல்லாரும் இனிமே என்னை "லகுலேஷ்" அப்பிடின்னு கூப்பிடுங்கப்பா. கஷ்டமா இருந்தா சுருக்கமா "லகு" னு கூப்பிடலாம்.

தம்பி... பேர் பிரச்னை வந்திருச்சில்ல..? உனக்கு நியே வச்சிக்க கூடாது. பெரிய மனுசங்க நாங்க எதுக்கு இருக்கோம். நாங்களே பாத்து சொல்வோம். சரியா?

சரிப்பா. இருந்தாலும் ஒரு கருத்து மட்டும் தான்.

அது.... அம்மா வச்ச பேர்னு சொல்லி செண்டிமெண்ட்ல கட்டி போட்டான்.
 சரி.......இனிமே புதுசா வந்த ஜீவ பேரு லகு. நம்ம காவல் துறை தான் ஜீவா..
 
 
 
                                                      அதற்கு பின் 25 ஆண்டுகள் கழித்து என் உடன் படித்த நண்பர்கள் சங்கமத்தில் நானும் கலந்து விட்டேன். எங்கள் வயது இந்த 2015 படி 37- 40 வயதிற்குட்பட்டவர்கள் தாம்.  முதலிரண்டு நாட்களில் நான் மட்டும் கொஞ்சம் தயக்கத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். இந்த சங்கத்தை உருவாக்கிய நிர்வாகியையும், இணை நிர்வாகியையும் நான் நேரில் சந்தித்தது கூட இல்லை என் வாழ்நாளில். ஏனெனில் நான் இந்த நண்பர்களுடன் படித்தது இரண்டே வருடங்கள் தான். வெவ்வேறு பள்ளிகளில் படித்தவர்கள், சிலரை பரஸ்பரம் மறந்தும் போனவர்கள் என்று அனைவரும் கலந்திருக்கும் அன்புக் கூட்டம்.
 
                                                       வெறும் இரண்டே வருடங்கள் உடன் படித்த என்னை அதுவும் பாலக வயதில்................. ஒரே நாளில் தங்களுக்குள் ஒருவராய் இத்தனை வருடங்கள் கழித்து இணைத்துக் கொண்டது பெரிய வியப்பேதும் இல்லை.

                                           " காரணம்.................மனமுதிர்வு "

 

அறிவியல் பற்றியா? அவன கூப்பிடு?

வணிகம் பற்றியா? பாபு, சுரேன்

சேல்ஸ் நுட்பங்கள? சுகு வந்ததும் கேட்கலாம்.....இரு.

ஏதாவது பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களா? திருக்குறள்

யாரையாவது மறைமுகமாய் திட்ட வேண்டுமா? திருக்குறள்

டைமிங் வசனங்கள் ? குபீரென சிரிக்க வேண்டுமா?

நடு சாலையில், உணவகத்தில், அழுவலகத்தில், தனியாக அலைபேசியைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்து கொண்டிரு ப்பது நாங்கள் தான்.
 
                                            இன்று வரை நேரடியாக அறிவுரை சொன்னதே இல்லை. எதேனும் குறள் மற்றும் விளக்கத்துடன் தான். தமிழிலோ ஆங்கிலத்திலோ எதையாவது பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போதும் ஒரு நாளும் யாரேனும் கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததில்லை. அதிலும் மீறி வந்தால் ம*** என்று சொல்லி தான் விவாதம் போகும்.  நாமாக எதோ ஒரு வார்த்தையை ஊகித்துக் கொள்ள வேண்டியது தான்.
 
                                             தமிழில் தான் நிறைய தொடுதிரை தட்டச்சு செய்திகளிருக்கும்....எதை பற்றியும் இன்று வரை விளையாட்டாக எடுத்துக் கொண்டதே இல்லை எனலாம்.
 
                                         பேசிக் கொண்டிருக்கும் போதே யாராவது ஒருவன் கவி புனைந்திருப்பான். பொருளாதார செய்திகள் வராத நாள் இங்கே இல்லை.
 
                                          சினிமா....சபாபதி படத்தின் வசனங்கள் அத்துப்படியாக ஒருவன் சொல்ல ஆரம்பிப்பான். சரி... உனக்கு பிடிச்ச நாயகன், நாயகி யாரு? அல் பசீனோ,எரின்ப்ரோகொவிச் ஜூலியாவிலிருந்து, சன்னிலியொனி, வரை,பிராட்லி கூப்பர், தியாகராஜா பாகவதர் , சாவித்திரியிலிருந்து, ஹன்சிகா, அஜீத் வரை, ( நாளைக்கு புதிய நாயகன் நாயகி யார்  வருகிறார்களோ ? அவர்களின் ரசிகர்கள் நாங்கள்)
 
                                         ஓட்டகூத்தரரும் வருவார், வைரமுத்துவும் வருவார், பேச்சின் ஊடே .
ஆழ்வார்களின், சைவத் துறவிகளின் பாடல்கள் விளக்கத்துடன் வேண்டுமா? நல்ல பொருளுரையோடு...இங்கே கிடைக்கும்.
 
                                         நாத்திகம் தலைவிரிக் கோலமாகத் திரியும்... விதண்டாவாதம் நெருப்பாக போகும்...டைமிங் கமெண்ட்ஸ் மன்னர்கள் சிலர் உண்டு நொடிப்  பொழுதில் ஒரு வண்டி நீர் ஊற்றி அணைத்து விடுவார்கள்..... மருத்துவன் எங்கேயிருந்து வருவானே என்று தெரியாது, இரட்டைக் கிளவி அர்த்தமில்லா வார்த்தைகள் என்று சொல்வார்கள். இவன் பதில்கள்,...இரண்டு அல்லது மூன்று  வார்த்தைகள், சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்.
 
                                         ஒரு நாள் விட்டமின் D குறைபாட்டுக்கு எதாவது பரிந்துரை சொல்லுங்கப்பா என்றேன். அறிவுரை சொல்வதென்றால் எங்கள் நண்பர்களுக்குசோறும் வேண்டாம், பக்கத்தில் சமந்த்தாவே நின்றிருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் (தங்கமணி விதி விலக்கு....ஹி ஹி மனைவி சொல் மிக்க மந்திரமேது ).பாய்ந்து பாய்ந்து அறிவுரை சொல்வார்கள்....பக்கம் பக்கமாய் எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்த போது 3 வார்த்தைகளில் சொன்னான் அவன்....
 

                                                 " ஒரு கூடை சன்லைட்"

 
 
                                        அரசியலின் மறுபக்கம் தெரிந்து கொள்ள வேண்டுமோ? வேண்டாமோ? தினமும் எங்கள் சங்கத்து அரசியல் வாதி ஒருவன் விரல்கள்  வலிக்க வலிக்க தட்டச்சு செய்திகள் சொல்லிக் கொடுப்பான். ஈ.வெ.ரா,அம்பேத்கர, காந்தி,நேரு, போஸ், எழுத்தாளர்கள் தொ.ப, வரை.... அலசுவது உண்டு. எனக்கு அவனிடம் சண்டை போடவில்லை என்றால் தூக்கம் வராது. வரலாற்று ஆசிரியரை திட்டிக் கொண்டே தான் கற்றுக் கொள்வோம்.நான் இன்றும் அப்படியே கருந்துளை முதல் கண்டங்கத்திரிக்காய் வரை, அரட்டை போகும்
 
                                      வெட்டிப் பேச்சு பேசுவதோடு நின்று விடாமலிருக்க சமூக சேவை செய்யலாம்ன்று முடிவெடுத்து தனியாக சங்கம் ஒன்றையும் ஆரம்பித்தோம்.  மரம் வளர்த்தல், இல்லாருக்கு அவரவர் விருப்பம் போல் நிதியுவி செய்தல். எங்கள் சங்க மற்றும் நிஜ காவல்க்காரன் இது வரை சில நூறு மரங்கள் நட்டிருக்கின்றான்.  சுரேன், ரமேஷ் உடனே களத்தில் இறங்கி  விட்டார்கள். வாய்ச்சொல்லில் நின்று விடாமல் செயல் வடிவம் கொண்டது சமூக சிந்தனைகள்.
 
 
                                         என்  நண்பர்களைப் போல் எனக்கும் தற்பெருமை இல்லாமல் பெருமிதம் மட்டும் மிக அதிகமாக உண்டு எங்கள் நட்பை நினைத்து. எங்களுடன்  படித்த தோழியர்? சேவைக்கு மட்டும் சிவப்பு கம்பளம்.
 
 
அதிகமாக புகழ எண்ணமிருந்தும் வேண்டாமென நினைத்து இத்துடன் விடுகிறேன்...
சில ..உரையாடல்கள், கவிதைகள், கிறுக்கல்கள், கீழ் வருவன
 
 

 

கிறுக்கல்

அறிவுச் சுடரே
அனுமனின் மறுபிறப்பே
சங்கத்தின்
காளமேகப் புலவனே
மொழிகளின் புரவலனே
பகுதி நேர
பகுத்தறிவு
பகலவனே
எல்லாவற்றிலும்
புலியாயிருப்பவனே
தங்கமணியிடம் எலியாயிருப்பவ்னே
ஆப்பிரிக்கா போறவனே
கண்டம் தாண்டி வளந்தவனே
எங்களருமை
நெட்டக்காலனே
வாழ்க நீ பல்லாண்டு😝😝😝😝😝😝
 
 

கிறுக்கல்

 

மும்பையின் டானே
முட்டுச் சந்தில
திடீர்னு சந்திச்சவனே
கருப்பையா
வாத்தியாரிடம்
அடி வாங்கியவனே
இன்னைக்கும்
இளமையா இருப்பவனே
தப்புத் தப்பா தங்கிலீஷ்
பேசினாலும்
எங்கள் உள்ளம் கவர்ந்தவனே
சமூக சேவை
சங்கத்தின் முதல் செயல் வீரனே
வீட்டுல மட்டும்
மிதி பட்டே சாவுறவெனே
ஈரேழு நாட்களிலே
வியாதியையும்
தூக்கிச் சாப்பிட்டவனே
உன் நம்பிக்கை
எங்களுக்கும் நல் வழிகாட்டி தான்
நல்லாயிரு நான்கு தலைமுறை வரை😄😄😄
 

கிறுக்கல்

 காத்துல பறந்தவனே...
காதல துறந்தவனே..
ஜோதிய மறந்தவனே
பாதியா மெலிஞ்சவனே!!!
l&Tல வேலை பார்க்குற
அப்பப்ப பயத்துல ஜெர்க் ஆகுற
அதனால வந்தது சக்கரை
உன் மேலயும் காட்டு அக்கரை
 
குரூப்ல இருந்து அடிக்கடி வெட்டுற
தமிழிங்கிலீஸ்ல மெசேஜ தட்டுற
மரத்தையெல்லாம் நட்டுற
மும்பையில என்னத்த நொடுற?😆😆😂😂
 

கிறுக்கல்

 
ஈர்க்குச்சி போன்றதே உடம்பு
யாரையும் ஈர்க்கும் வெள்ளை மனசு
மிரட்ட தோன்றா உருவம் எனினும்
மராட்டியரையே வேலை வாங்கும் லாவகம்
அகவை 40 ஆகும் நிலையிலும்
பழகும் வகையில் இன்னும் குழந்தையே
இவனுக்குபிடித்த கலர் பிங்கி
இவனோடு ஆடணும் இங்கி பிங்கி பாங்கி
 
 

கிறுக்கல்

 
 சனியென்ன
ஞாயிறென்ன
வெயிலடிச்சாயென்ன?
மும்பையில அடை மழை பெய்தா எனக்கென்ன?
மரம் நடுவது என் கடமை
என் கடன் பணி செய்து கிடப்பதே
நீரூற்றுவது யாரு?
நட்ட மரத்தை பேணுவதாரு?
இந்த குழப்பமெல்லாம் நமக்கெதுக்கு?
மரம் நடுவோம
மனம் குளிர்வோம்்
வருவது வரட்டும்
பின்னால்
பார்க்கலாம
முடிஞா என்னை பின் தொடரு
முடியலைனா
பின்னாளில்
இங்க வந்து பழம் சாப்பிட்டு போ...்
 

கிறுக்கல்

அப்பா:

" எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்" என்று பாடிக் கொண்டிருந்த இளைஞனின் நடவடிக்கைகளில் தான் எத்தனைஎத்தனை மாற்றங்கள்.
பிள்ளை பிறந்ததும் பொறுப்பு வந்து விடுகிறது.
"தந்தைமகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்ற குறளை மெய்ப்பிக்க அவர் படும் கஷ்டங்கள்....அப்பப்பா....
சிறு குழந்தையை தலைக்கு மேல் தூக்கி திருவிழாவை காட்டுவார்.
தனக்குத் தெரியாததும் தன் குழந்தைக்கு தெரிய வேண்டுமென. தினசரி வாழ்விலும் அங்ஙனமே. தான் படித்ததை விட சிறப்பான பள்ளி,உணவு, உடை என எல்லாவிற்றிலும் தனக்கு கிடைத்ததை விட சிறப்பானதையே கொடுத்து அழகு பார்க்கும் ஆர்வம்.
மத்தியதர வகுப்பில் பிறந்த தந்தையர் பிள்ளை வளர்ப்புக்காகவே தங்களது பாதி ஆயுள் உழைப்பை கொடுக்கின்றனர்.(பாதிக்கும் மேலேயே).  30 வயதில் அப்பா ஆனதுமே ஒரு சந்நியாசி நிலைக்கு வரும் தந்தையர் எத்தனை எத்தனை.
நமக்கெதுப்பா இனிமேல். பிள்ளைகளுக்கு நல்லதா வாங்கி கொடுத்தா போதும் என்ற உயர்ந்த சிந்தை .
உள்ளத்தில் பொங்கும் அன்பைக் காட்டக் கூட தெரியாத வெள்ளை மனசு...
(நம்மை தவிர) பார்ப்பவர் அனைவரிடமும் தன் பிள்ளையின்  பெருமையை சொல்லி உவகை அடைவது.
தந்தையை போற்றுவோம்!!!!
தந்தையர் தின வாழ்த்துக்கள்!!!!
 

கிறுக்கல்

 
 
 பிணிகளில் கொடியது பசி
விருந்தோம்பலும் மறந்த மாக்கள்
யாசிப்பவர்க்கும்
ஈயேன் என்றே
உரைக்கும் காலமிது
திரகடலாடியும்
தேட வேண்டும்
அட்சயப் பாத்திரமாம் அமுதசுரபியை
மீண்டும் பிறந்து வா ஆபுத்திரா!!

 

கிறுக்கல்

 

அவ்வையின் வரிகளை கடன் வாங்கி எழுதிய கவிதை:
கொடிது கொடிது வறுமை கொடிது
பசியென்னும் நோயே. பாரினில் கொடிது
ஒருநாளைக்கு ஒழி என்றால் ஒழியா
பழிபாவத்திற்கு அஞ்சா பாழும் வயிறு
பசியால் வளரும் சமூக குற்றங்கள்
பலப்பல கண்டு மனம் நலிவுற்றேன்.
இறைவன் ஒருவன் இருப்பானாகில்
என்முன் அவனை வருவானாகில்
ஒன்றை மட்டும் கேட்டுப் பெறுவேன்.
அள்ள அள்ள குறையா அட்சய பாத்திரம்.
உலகத்தாரின் பசியைப்போக்கும்
உள்ளம் மட்டுமே இறைவன் இல்லம்.

 கிறுக்கல்

நம் சங்கம் பற்றிய கவிதை:


பல காலம் இணையாதிருந்தோம்!!!
நல்ல நட்பு அணையாதிருந்தோம்!!!
அட்மின் ஆரம்பித்த சங்கம்!!!
அன்பின் பிரவாகம் பொங்கும்!!!
நாத்திகம் பேசும் கடவுள்கள்.....
காதல் பேசும் கிழவர்கள்...
முதலாளிகளாக விரும்பும் மார்க்ஸ்கள்...
நிறைந்த சங்கம்!!!!
இரவு பகல் போகும்!!!
தட்டச்சு செய்து விரல் நோவும்..
அறிவியல் வம்பு பகிர்வோம்..
அறிவிலாத அன்பும் நுகர்வோம்..
காதலும் காமமும் ஒன்றே!!
எதையும் பகிர்வோம் இன்றே!!
சமூக சேவையும் செய்வோம்
மரம் நட்டு உயிர் உய்வோம்!!!
பேசாத விஷயமில்லை..
பேச்சிலும் விஷமம் இல்லை.
யாரின் படத்தையும் மாட்டுவோம்...
அவனை ஒரு காட்டு காட்டுவோம்!!!!
பாசம் என்றும் அன்பென்றும் பேரை மாத்துவோம்!!!
நட்பென்றால் நாம் என்று  காட்டுவோம்!!!!!
 
 

கிறுக்கல்

 
 
முச்சங்கங்களின் வழித் தோன்றல  எங்கள் சங்கம்
தெவிட்டாத தமிழ் இன்னும் விரல்களில்
 
இங்கு மட்டுமே
 சூரிய அஸ்தமனமில்லை
பாரெங்கும் எங்களுள் ஒருவன்
 
உலக வரலாறு பேசுவோம்
புவியியல் ரீதியாக எங்கெங்கோ இருந்து கொண்டு..
 
கருத்துக் குவியல் கிட்டங்கி தான்..
 
அறிவுரை வேண்டுமா?
அடை மழையாய் கிடைக்கும்.
 
அரசியல் வேண்டுமா?
அழகாய் சண்டாக்கலாம்!
 
ஆத்திகம் பேசலாமா?
தீட்சை கூட வாங்கலாம்!
 
நாத்திகம் கூடாதா?
பகுதி நேர பகுத்தறிவு வாதிகள் நாங்கள்!
 
கலவி அறிவும் வேண்டுமா?
வாத்ஸ்யானர்கள் நாங்கள!்
 
உடல்நிலை சரியில்லையா?
மருத்துவனிருக்கிறான்
பரிந்துரைகள் சொல்ல
 
எங்களுள் வள்ளுவன் இருக்கிறான்
கால்மேகப் புலவனும் இருக்கிறான்
கனிதம் புரியவில்லையா? ராமானுஜனும் உண்டு
 
அலரும் பேசுவோம்
அறிவியல் நுட்பமும் அலசுவோம்
 
எதுவுமே தெரியவில்லையா? மனித கூகுள் இருக்கிறான்
எல்லாம் கிடைக்கும்
 
ஏதேனும் பிரச்சனையா?
காவலன் ஒருவன் இருக்கிறான்
 
ரத்தம் வேண்டுமா?கர்ணன் இருக்கிறான்
 
சிறு பிள்ளை  ஆக வேண்டுமா?
மனதை இட்டுச் செல்வோம்
அவ்வப்போது
 
உடன் பயின்ற தோழிகளா?
இன்றும் கனவுக் கன்னிகள் தாம்
 
ஆனால் எங்கள்  மனமுதிர்ச்சிக்கு
 பால் வேறுபாடு தெரியாது
கோடு தாண்டிப் போவதுமில்லை!

சமூக சிந்தனைக்ள்
செயல் வடிவங்களில்  தான்

 மரமும் நடுவோம்
இல்லாருக்கும் ஈவோம்
 
தொடு திரை  அடிமைகளா?
இல்லையில்லை  அன்புக்கு மட்டுமே!
 
ஆகையினால்  நடு நிசியிூம்
செய்திகள் .. 500 எட்டும்
 
தொடர்பில் இருக்க வேண்டுமா?
வாயில் திறந்தே இருக்கும்!
 
தொடர்பற்றுப் போக எண்ணமா?
மன்னிக்கவும்... இது ஒரு வழிப் பாதை!
 
அகவை நாற்பதா?
எங்கள்  மனம்  என்றும்
இளமைச் சோலையே!
 
மகிழ்ச்சி?

அது மட்டுமே  எங்கள் குறிக்கோள்!
 
வீடுபேறு?

வேறுங்கு?
எங்கள் சங்கமம் தான்!!!!!்
 
 

 தொடரும்.....ஏனெனில் நாங்கள் அன்பு நண்பர்கள்



8 comments:

  1. ஜீவா, தொடரட்டும் இந்த நடை. மிக அருமை

    ReplyDelete
  2. ஜீவா, தொடரட்டும் இந்த நடை. மிக அருமை

    ReplyDelete
  3. Super Lagu....இன்னும் நிறைய எழுதுப்பா. தொடரட்டும்இக்கவி மழை

    ReplyDelete
  4. Good lagu..relished the way of narration and style.wish you continue this

    ReplyDelete
  5. Good lagu..relished the way of narration and style.wish you continue this

    ReplyDelete
  6. அற்புதம் லகு..... நல்ல நடை... அழுக்காமலும் வழுக்காமலும் வார்த்தைகள் அணிவகுக்கிறது. தொடர்ந்து எழுது... நான் எப்போதும் சொல்வதுதான் நம் மொழி நம் வசப்படாது போகுமா? மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள் நீயும் தமிழும்...

    ReplyDelete
  7. அற்புதம் லகு..... நல்ல நடை... அழுக்காமலும் வழுக்காமலும் வார்த்தைகள் அணிவகுக்கிறது. தொடர்ந்து எழுது... நான் எப்போதும் சொல்வதுதான் நம் மொழி நம் வசப்படாது போகுமா? மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள் நீயும் தமிழும்...

    ReplyDelete
  8. மிக்க நன்றி அருமை நண்பர்களே !

    ReplyDelete